10 Feb 2015

தொப்பி அணிவதற்க்கான ஆதாரங்கள் !.

அல்லாஹ் சுபஹானுவத் தஆலா கூறுகின்றான் :

 ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள் -(அல்- குர்ஆன் 7:31)

 உங்களில் ஒருவர் தொழுதால் இரு ஆடைகளை அணிந்து கொள்ளவும். ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகவே ‘அலங்கரித்துக் கொள்ளவும். அதற்கு அவனே தகுதியுடையவன். அவ்வாறு இரு ஆடைகள் அற்றவர்கள் கீழுடையாவது அணிந்து கொள்ளவும். உங்கள் தொழுகையில் யூதர்களுக்கு ஒப்பாக வேண்டாம். (நூல்: பைஹகீ, ஸுனனல் அல்குப்ரா 2ஃ236)

நாபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், ‘நான் ஒரு ஆடை அணிந்து தொழுவதைக் கண்ட இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு ஆடைகளை அணியக் கூடாதா? என்று கேட்டார்கள். பின்பு, உங்களை மதீனத்து மக்களிடம் அனுப்பினால் இவ்வாறு ஒற்றாடையுடன் செல்வீர்களா? என்றார்கள். இல்லையென்று பதில் கூறினேன். அப்போது அவர்கள் மக்களுக்காக அன்றி அல்லாஹ்வுக்கே அலங்கரிக்க வேண்டுமென்றும் அதற்கு அவனே தகுதியுடையவன் என்றும் கூறினார்கள். இவைகளை அடிப்படையாகக் கொண்ட புகாஹக்கள் (சட்ட மேதைகள்) கௌரவமானவர்களிடம் செல்லும்போது தலையை மறைப்பது காலங்காலமாய் முஸ்லிம்களின் மரபாய் இருந்து வந்துள்ளதால், தொழுகையில் தலையை திறந்து தொழுவது மக்ரூஹ் என்றார்கள். ஆணும், பெண்ணும் தனது அவ்ரத்தை மறைப்பது கட்டாயமாகும். ஆனால் ‘ஸீனத்’ எனப்படும் அலங்கரித்தல் ஒரு பரவலான உட்கருத்தைக் கொண்டது. அது தலையை மறைப்பதையும் அடக்கிக் கொள்ளும். அக்கருத்தை உறுதிப்படுத்துபவையாகவே, முஸ்லிம்கள் ஆரம்பம் தொட்டு இன்றுவரை அதைப் பேணி வந்துள்ளனர். இதன் அடிப்படையில் இமாம்களும் தொப்பி அணிவதை வற்புறுத்தியுள்ளார்கள். (ஷரஹுல் மனிய்யத் 349, ஷரஹுல் முஹத்தப் 3/173)

1. அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.

 2. இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து ‘இதனை நீ அணிந்து கொள்’ எனக் கூறினார்கள். (முக்ஜமுல் கபீர் அத்தபரானி 3ஃ19 (2520))

3. சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது, ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. (புஹாரி 5082)

 4. (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர் : ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி 

5. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்’ அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலியல்லாஹு அன்ஹு)நூல் : முஸ்லிம்

6. (அதே மக்கா வெற்றியின் போது) ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்’ அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம்

 7. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்’ அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

8. இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையி தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். (திர்மிதி) 

9. ‘இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம்

10. அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவாகள் அறிவிக்கிறார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள்.’ -நூல்: தப்ரானி.

 11. ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’. நூல்: ஸுனன் அபூதாவூது 4075, ஸுனன் திர்மிதி 3919.

 12. ஹஜ்ரத் ஹஸனுல் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை, தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’.-நூல் புஹாரி 1/151

 13. தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார். தப்ரானி இமாம் அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமர் சுயூத்தி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள்.
 நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112

 14. அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
 நூல்: ஸஹீஹுல் புஹாரி பாகம் 2 பக்கம் 863.

15. ஹஜ்ரத் முல்லா அலி கரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.-
 மிர்காத் அல் மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம்

9 comments:

  1. அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியக் கூடாது. முழுக்கால் சட்டை அணியக் கூடாது. புர்னுஸ் அணியக் கூடாது. அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்'' என்று பதிலளித்தார்கள்.
    அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 134, 36 6, 1838, 1842, 5794, 5803, 5805, 5806

    இந்தச் செய்தியில் இடம் பெறும் "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழி பெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது "இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் எனவும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்' எனவும் இவர்கள் கூறுகின்றனர்
    .( புர்னுஸ் என்றால் என்ன என்பதை கடைசியில் பார்ப்போம்)
    குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
    நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று தான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.
    ஜும்மாவுக்குப் பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம். அது போல் தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    இஹ்ராம் கட்டியிருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.
    தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.
    தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது யாராவது பிடிவாதம் பிடித்தால் இந்த ஹதீஸில் கூறப்பட்ட அனைத்து ஆடைகளைப் பற்றியும் அவ்வாறு தான் அவர்கள் கருத்து கொள்ள வேண்டும்.
    அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக் கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறப்படுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று இவர்கள் கூறுவார்களா?
    மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்றவைகளை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா

    ReplyDelete
  2. இனி "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.
    1. தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை 2. நீண்ட தொப்பி. இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர். (நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)
    அரபி மொழி அகராதி நூலாகக் கருதப்படும் லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
    புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிகச் சிறிய வகை தொப்பியையே தொப்பி எனக் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இடம் உள்ளது.
    உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது.
    அதில் ...உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை (தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் "சீராக நில்லுங்கள்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்குக்கிடையே சீர்குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். "என்னை நாய் கொன்று விட்டது... அல்லது தின்றுவிட்டது'' என்று கூறினார்கள். (அப்போது அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்) உடனே இந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறை மறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக பதிமூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (புர்னுஸ்) (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறை மறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் (கொண்டு தற்கொலை செய்து) கொண்டான். நூல்: புகாரி 3700

    முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில் அவனைப் பிடிப்பதற்காக நீண்ட தொப்பியை எறிந்தார் என்று இடம் பெற்றுள்ளது.
    ஒருவரைத் தாக்கிப் பிடிக்கும் அளவுக்கு அந்தத் தொப்பி நீளமானதாகவும், கனமானதாகவும் இருந்துள்ளது. நம்மிடம் இருக்கும் நூல் தொப்பி குறிப்பிட்ட இடத்துக்குக் கூட போய் சேராது. கனமில்லாததால் இடையிலேயே விழுந்து விடும். எனவே ஹதீஸில் குறிப்பிடப்படும் புர்னுஸ் எனும் தொப்பியும் நமது காலத்தில் நடைமுறையில் இருக்கும் தொப்பியும் ஒன்றல்ல என்பதை இதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். புர்னுஸ் என்ற வார்த்தை இடம் பெறும் இந்தச் செய்தியை தொப்பி அணிய ஆதாரமாகக் காட்டுவோர் ஹதீஸில் கூறப்படுவது போன்ற இரும்புத் தொப்பியை அணியுமாறு தான் கூற வேண்டும். னவே நடைமுறையில் அறியப்பட்டுள்ள தொப்பிக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
    தொப்பி என்பதற்கு இப்போது நமது காலத்தில் வழக்கத்தில் உள்ள தொப்பி என்பது தான் பொருள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் இந்த ஹதீஸ் வாசகத்தில் இருந்து தொப்பி அணியலாம் என்ற கருத்து தான் கிடைக்கும் அவசியம் என்ற கருத்தோ சிறந்தது என்ற கருத்தோ கிடைக்காது.

    ReplyDelete
  3. நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: ருக்கானா (ரலி) நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556

    இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: "இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானதல்ல. இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் இரண்டாவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
    ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களும் இவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.
    யார் என்றே தெரியாத இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்பதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
    மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வலியுறுத்துவதும் இல்லை. தொப்பி அணிவதை வலியுறுத்துவோர் வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். ஆனால் தொப்பி மட்டும் அணிபவர்கள் இணை வைப்பவர்களுக்கான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாக உள்ளது.
    இது பலவீனமான ஹதீஸாக இருப்பதுடன் தொப்பி அணிவதற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

    ReplyDelete
  4. முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட  தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
    முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.
    குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் "தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.
    மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.
    திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை.
    இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது?  தொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும்.
    தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
    தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் சொல்லாமல் இருக்க மாட்டான்.

    ReplyDelete
  5. நபிவழியில் ஆதாரங்கள் உண்டா

    சாதாரணமாக தொப்பி அணியாவிட்டாலும் தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று தான் அதிகமான முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஆனால் தொழுகையின் போது தொப்பி அவசியம் எனக் கூறும் ஒரு நபி மொழியும் இல்லை. தொழுகையின் போதோ தொழுகை அல்லாத மற்ற சந்தர்ப்பங்களிலோ தொப்பி அணிவது அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எந்தச் சான்றும் இல்லை.
    இன்னும் சொல்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையிலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் தொப்பி அணியாமல் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னிலையில் நபித்தோழர் பலர் தொப்பி இல்லாமல் காட்சி தந்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.
    (ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தமக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து "உங்களுடைய இடத்தில் நில்லுங்கள்'' என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 275

    புகாரியின் 571ஆவது ஹதீஸில்  
    "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் தம் கையைத் தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் யாரும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு வர மாட்டார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது!

    ReplyDelete
  6. தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுள் சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன.
    மற்றும் சில ஆதாரங்கள் அவர்களின் கருத்தை நிலைநாட்டும் வகையில் இல்லை.
    இன்னும் சில ஆதாரங்கள் அவர்களின் வாதத்துக்கு எதிராக உள்ளன. அவர்களின் ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
    தொப்பி அணிவது அவசியம் என்பதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை தங்களின் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்  
    ....அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்'' என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது... அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.
    திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இதில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. சொர்க்கத்தில் கிடைக்கும் உயர்ந்த பதவிகளை மக்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறும் போது அவர்கள் அண்ணாந்து பார்ப்பதை செயல் மூலம் காட்டினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களும் தமது தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து இப்படி அண்ணாந்து பார்ப்பார்கள் என்று கூறினார்கள்.
    இப்படி அண்ணாந்து பார்ப்பதைச் செயல் மூலம் காட்டிய போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்று அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். அவர்களின் தொப்பி விழுந்தது என்று கூறியது உமர் (ரலி) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? என்பதை அறிவிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை என்று அவருக்கு அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். இது அந்த ஹதீஸின் வாசகத்திலேயே கூறப்பட்டுள்ளது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் இந்த ஒன்று மட்டுமே. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதிப்படுத்தப்படவில்லை.
    இது இந்தச் செய்தியில் காணப்படும் முதல் பலவீனம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் குறித்தும் குறைபாடுகள் உள்ளதால் இந்தச் செய்தி மொத்தமாக நிராகரிக்கப்படும் நிலையில் இருப்பது இதில் உள்ள இரண்டாவது பலவீனமாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதி இல்லாவிட்டாலும் உமர் (ரலி) தொப்பி அணிந்திருக்கலாம் என்று முடிவு எடுப்பதைக் கூட  மேற்கண்ட பலவீனங்கள் தடுத்து விடுகின்றன. இந்தச் செய்தி ஒட்டு மொத்தமாக பலவீனமாக உள்ளதால் இதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொன்ன நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

    ReplyDelete
  7. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1846, 3044, 4286, 5808

    இந்த ஹதீஸை தொப்பி போடுவதற்கு ஆதாரம் காட்டுவோர் ராணுவ வீரர் போல் இரும்புத் தொப்பி போடுவது தான் சுன்னத் என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி இணை வைப்பாளர்களிடம் போர் புரியச் சென்றார்கள். அதனால் அவர்கள் தலையில் இரும்பு கவசத் தொப்பி இருந்தது. போர்க் களங்கள் தவிர வேறு நேரங்களில் அவர்கள் இரும்புத் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் இல்லை.
    இரும்புத் தொப்பியை எல்லாம் தொப்பிக்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவதில் இருந்து உருப்படியான ஆதாரம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

    ReplyDelete
  8. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். அல்குர்ஆன் 7:31

    "இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிடுகிறது;. எனவே தொப்பி என்பதும் ஒரு அலங்காரம். ஆகவே தொப்பி அணிந்து வர வேண்டும்'' என்று சிலர் வாதிடுகின்றனர்.
    இவர்களின் வாதம் முற்றிலும் பலவீனமானதாகும். தொப்பி ஒரு அலங்காரப் பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் மார்க்கக் கடமை என்று தவறான கருத்தை விதைத்ததாலும் நிர்பந்தப்படுத்துவதாலும் தொப்பி அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுது முடித்தவுடன் அதை மடித்து சட்டைப் பைக்குள் வைப்பவர்களே அதிகம். இதிலிருந்து இதை ஒரு அலங்காரப் பொருளாக இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும் அலங்காரத்துக்கு எதிரானதாக தொப்பியைக் கருதுகிறார்கள் என்பதையும்  விளங்கலாம்.
    மேலும் உண்மையில் அலங்காரமாக அழகாக இருக்கும் பல பொருட்களை இவர்கள் அணிந்து வருமாறு கட்டளையிடுவதில்லை. கண்ணாடி, கோட், சூட், டை போன்ற பொருட்கள் அலங்காரப் பொருட்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அணிந்து வருவது சுன்னத் என்று சொல்வார்களா?.
    இறைவனை வணங்க வரும் போது நல்ல ஆடைகளை அணிந்து தூய்மையாக வர வேண்டும் என்பதையும், அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாணமாக தவாஃப் செய்வது போன்ற காரியத்தை செய்யக் கூடாது என்பதையும் தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் கூறுவது போன்று தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருமாறு இந்த வசனம் கூறவில்லை.
    இவை தான் தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்களின் ஆதாரம். இந்த ஆதாரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட செய்திகளில் தொழுகையில் தொப்பி போட்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை.
    அடுத்து இவர்கள் காட்டிய ஆதாரங்களில், தொப்பி என்று அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் அரபிச் சொல்லுக்கு நீண்ட தொப்பி என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் அவை அடுத்தவர்களைத் தாக்கும் அளவுக்குக் கனமானதாகவும் இருந்துள்ளது. இதற்கும் இப்போது தொப்பி எனக் கூறப்படுவதற்கும் சம்மந்தம் இல்லை.
    தொப்பியைப் பற்றி இவர்கள் எடுத்துக் காட்டிய எந்தச் செய்தியிலும் தொப்பி அணிய வேண்டும் என்ற கட்டளையோ ஆர்வமூட்டுதலோ இல்லை.
    மேலும் இவர்கள் தமிழில் வெளியிட்ட தொழுகை ஷாஃபீ, தொழுகை ஹனஃபீ ஆகிய நூல்களில் தொழுகையின் பர்லுகள், வாஜிபுகள், சுன்னத்துகள் என்று சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் தொப்பி அணிவது பர்லு என்றோ வாஜிபு என்றோ அல்லது சுன்னத் என்றோ குறிப்பிடவில்லை. இதிலிருந்து தொப்பி போடுவது சுன்னத் இல்லை என்பதை அவர்கள் நூலில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
    மேலும் தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்றோ, அல்லது தொப்பி போடாமல் தொழுபவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றோ எந்த மத்ஹப் நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

    ReplyDelete
  9. முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட  தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
    முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.
    குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் "தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.
    மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.
    திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை.
    இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது?  தொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும்.
    தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
    தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் சொல்லாமல் இருக்க மாட்டான்.

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live